தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 26, 2012

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் அருகம்புல்!


அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்!
புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.
வேரோடுப் பிடுங்கி எடுத்த பசுமையான அருகம்புல் முழுச் செடியையும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பத்து மிளகைச் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் நீருடன் உட்கொண்டு வர ரத்தம் சுத்தமாகும். கண் பார்வையும் தெளிவாகும்.
அருகம்புல் வேரையும், புல்லையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு சிறிதளவு மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கஷாயத்துடன் தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக தினமும் காலை – மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
சுத்தம் செய்த பசுமையான அருகம்புல்லையும், வேரையும் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு, அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பசையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பசையை உடல் முழுதும் தேய்த்துக்கொண்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால், உடல் அரிப்பு, படர்தாமரை, சொறி, சிரங்கு மற்றும் புண்களும் குணமாகும். நோய் குணமாகும் வரை அருகம்புல் பசைக் குளியல் அவசியம்.
அருகம்புல்லை வேரோடு எடுத்து சுத்தப்படுத்தி, அரைத்துச் சாறு பிழிந்து, சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி. என்று கலந்து அதோடு சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
வேரோடு பிடுங்கி எடுத்த அருகம்புல்லை தண்ணீரில் நன்கு சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்த வேண்டும். நன்கு காய்ந்த பின் இடித்துத் தூளாக்கி, சுத்தமான துணியால் சலித்தெடுக்க வேண்டும். இந்தச் சூரணத்தை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு தண்ணீருடன் சேர்த்து உட்கொண்டுவந்தால் நன்கு சிறுநீர் பிரியும். உடல் பருமனும் குறையும். அருகம்புல் பசையை வெட்டுக்காயங்கள் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment