தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 16, 2016

அறிவு வளரவும் , நினைவாற்றல் பெருகவும் இதை செய்தால் போதுமாம்...

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.
தேவர்களும், அசுரர்களும் ஒருமுறை ஒருவருக்கொருவர் பகைத்துப் போர் புரிந்தார்கள். தேவர்கள் நரை, மூப்பு, திரை, மரணம் என்ற துன்பங்கள் இன்றி வாழ விரும்பினார்கள். தேவர்கள், பிரம்மதேவரின் துணையுடன் திருமாலைக் காணச்சென்றனர். திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்டால் மரணமில்லாத வாழ்க்கை வாழலாம் என திருமால் கூறினார். மந்தரகிரியை மத்தாகவும், சந்திரனை தறியாகவும், வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்த்ரகிரியை தனது முதுகில் தாங்கினார்.
அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மறு நாள் ஏகாதசி, பதினோராவது திதி. அவ்வாறு பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு வருத்தம் தாளாமல் நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் கலந்து ஆலாலம் எனப் பேர் பெற்றது. தேவர்கள் பயந்து ஓடினர். வெண்ணிறமாக இருந்த விஷ்ணு, விஷ வேகத்தால் நீல நிறம் ஆனார். வானவர்கள் அஞ்சி திருக்கயிலாயம் சென்று சிவபிரானை தஞ்சமடைந்தனர்.
இவர்களைக் காப்பாற்ற ஆலால விஷத்தினை எடுத்து உண்டு நீலகண்டன் எனப் பேர் பெற்றார் சிவபிரான். அந்த விடம் உள்ளே சென்றால் உள் முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். உமிழ்ந்தால் வெளி முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். ஆகையால், உண்ணாமலும், உமிழாமலும், கண்டத்தில் தரித்தருளினார். சிவபிரானின் கருணைக்கு இது ஒன்றே சாட்சி.
இதன் பின் மீண்டும் பாற்கடலைக் கடையும்போது, பாற்கடலில் இருந்து, லெட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி , சூடாமணி முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. ஏகாதேசியன்று இரவு முழுவதும் பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதேசியன்றுஅதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.
மறுநாள் திரயோதசி (பதிமூன்றாம் நாள்) அன்று தேவர்கள் சிவபிரானை முன்னாளே வணங்காது இருந்த தங்கள் குற்றத்தை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
சிவபிரான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரிய எண்ணி கயிலையில் அன்று மாலை (4:30 மணி முதல் 6:00 மணி வரை) பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகைக் காணத் திருநடம் புரிந்தார். அது முதல் திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று பெயர்பெற்றது.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் .

No comments:

Post a Comment