தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஏப்ரல், 2017

சார்ஜ் ஆகும்போது பேசினால் மொபைல் வெடிக்கும் என்பது உண்மையா? நீங்கள் தெரிய வேண்டியது..

இப்படி ஒரு செய்தியுடன் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் கண்டுவருகிறோம். உண்மையிலே மொபைல் சார்ஜ் ஆகும் போது பேசினால் ஷாக் அடிக்குமா? அது உயிரையே பறிக்குமா?
எது ஆபத்தான மின்சாரம்?

100 முதல் 200 மில்லிஆம்ப்ஸ் (0.1Amps -0.2 Amps) வரையிலான மின்சாரம் உண்மையிலே ஆபத்தானது. உயிரையே பறிக்கக்கூடியது. 200 mA விட அதிகமான மின்சாரம் மயக்கமடையச் செய்யும். தீக்காயங்களை உண்டாக்கும். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டால் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கலாம். செயற்கை சுவாசம்(Artificial respiration) இந்தச் சூழலில் உதவும்.

100 mA-க்குக் குறைவான மின்சாரம் வலியைக் கொடுக்கும். மூச்சு விட சிரமமாக்கும். 10 mA-க்குக் குறைவாக இருந்தால், மின்சாரத்தை உணர முடியும். வேறு ஒன்றும் ஆகாது.

பொதுவாக மொபைல் போன்கள் 3.7வோல்ட் Li-ion பேட்டரிகளைக் கொண்டிருக்கும். ஐபோன் 6 மாடலில் 1810mAபேட்டரி இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 3.7வோல்டேஜ் அழுத்தத்தில் 1.8Amps மின்சாரம் தரும். இது ஆபத்தான மின்சாரம்தான்.

ஆனால், மொபைல் ஃபோன் சார்ஜ் செய்யும்போது பேசினால், அது ஏன் வெடிக்க வேண்டும்? அல்லது, மின்சாரம் பயனரின் மீது பாய வேண்டும்?

ஒரிஜினல் மொபைல் சார்ஜர்கள் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பில்லை. மொபைல் ஃபோன்களை சார்ஜ் போடும்போது உயர் அழுத்த பவர் பாயிண்ட்டில்தான் போடுகிறோம். அதில் ஏதேனும் ஷார்ட் சர்க்யூட் ஆனால், அது மொபைல் போனை பாதித்து, அதன் மூலம் யூஸரையும் தாக்கலாம். ஆனால், அதற்கும் மொபைல் போன் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மொபைலை சார்ஜரில் இருந்து எடுக்கும்போதுகூட மின்சாரம் தாக்கலாம். பெரும்பாலான சம்பவங்களில் போலி சார்ஜர்கள் பயன்படுத்தியதால்தான் மொபைலில் மின்சாரம் தாக்கியிருக்கிறது. எனவே, முடிந்தவரை ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.

ஒரிஜினல் சார்ஜர் இருந்தால் சார்ஜ் போடும்போது பேசலாமா?

அதைத் தவிர்க்கலாம். ஏன் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

சார்ஜ் போடும் போது மொபைல் சூடாவதைப் பார்த்திருப்போம். அதே போல் நீண்ட நேரம் பேசினாலும் மொபைல் சூடாகும். சார்ஜ் போட்டுக்கொண்டே நீண்ட நேரம் பேசுவதால், இன்னும் அதிகமாக சூடாகும். இது பேட்டரியின் ஆயுளை பாதிக்கும். காதுகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

முன்பெல்லாம் பேட்டரி குண்டாக மாறுவதைக் கவனித்திருக்கலாம். இதுவும் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியதால் வந்த வினைதான். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், அது ஒருநாள் வெடிக்கலாம்.

தொடர்ந்து பேட்டரி சூடாகிக்கொண்டே போனால், அதன் கெப்பாசிட்டி குறையும். 10 மணி நேரம் சார்ஜ் போட்டாலும் பாதிதான் சார்ஜ் ஆகியிருக்கும். அல்லது அரை மணி நேரத்திலே சார்ஜ் தீர்ந்துவிடும்.

சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதால் உண்டாகும் ஹீட், சார்ஜரையும் பாதிக்கலாம்.

மொபை ல்சார்ஜ் குறைவாக இருக்கும்போது கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருக்குமா?

இதுவும் ஒரு கட்டுக்கதைதான். பேட்டரியின் அளவுக்கும் கதிர்வீச்சின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அனைத்து மொபைல் நிறுவனங்களும் பல தடவை தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.

இறுதியாக, இதுவரைக்கும் நடந்த சம்பவங்கள் அனைத்திலும் டூப்ளிகேட் சார்ஜரோ அல்லது தரம் குறைந்த மொபைல்களோதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.அவை ஆபத்தானவை என்பது உண்மையே. ஆனால், அதற்கும் மொபைல் சார்ஜ் போடும்போது பேசுவதால் தான் விபத்துகள் நடக்கின்றன என்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

-விகடன்-
06 Apr 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக