தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஜூலை, 2017

நீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

நம்மில் ஏராளமானோர் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், பிறந்த மாதம், பிறந்த நாள், பிறந்த நேரம் போன்றவை ஒருவரின் குணநலன்களைப் பற்றி கூறும் என்று சொன்னதும், எங்கே என்னைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புவோம்.
அந்த வகையில் இங்கு நீங்கள் பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களின் குணநலன்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் இடையே ஆரம்பமாகும். சரி, இப்போது நீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என பார்ப்போம்.
சித்திரை
தமிழ் மாதத்தின் முதல் மாதம் தான் சித்திரை. இது ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 15 – மே 15 வரையானது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்காமல் விடமாட்டார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் பிரகாசிப்பார்கள். இதனால் பலரது பகையை சந்திப்பார்கள். இருப்பினும் அனைத்தையும் தாங்கி சிறப்புடன் செயல்படுவார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிகவும் அதிகமாக வரும். இக்கோபத்தை அடக்கினால், வாழ்க்கை பிரகாசமாக இருப்பதோடு, உங்களை வெல்ல யாராலும் முடியாது. கோடைக்காலத்தில் பிறந்த இவர்கள், அடிக்கடி எண்ணெய் வைத்து குளித்து வருவது நல்லது.
வைகாசி
வைகாசி ஆங்கில மாதத்தின் மே 15 – ஜூன் 15 வரையானது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். வாழ்க்கையில் பல துன்ப இன்பங்களைப் பெறுவார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் கையில் பணம் நிற்காது. வரவு அதிகரிக்க, செலவும் அதிகரிக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிக்க பிடிக்காது. இருப்பினும் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களுக்கு கோபம் வராது. ஒருவேளை கோபம் வந்தால், அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபம் கொள்வார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் யாருடனும் அவ்வளவு வேகமாக பழகமாட்டார்கள்.
ஆனி
தமிழ் மாதத்தின் மூன்றாவது மாதமான ஆனி ஜூன் 15 – ஜூலை 15 வரையானது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். இவர்கள் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி கொண்டவர்கள். வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். இவர்களது பேச்சு மற்றவர்களை மயக்கும் படி இருக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் மற்றும் ரோஷக்காரர்கள்.
ஆடி
ஜூலை 15 – ஆகஸ்ட் 15 வரையான ஆங்கில மாதத்தைக் கொண்டது தான் ஆடி. இம்மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட்டு, அதனை செயல்படுத்துவதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வார்கள். மிகுந்த பாசக்காரர்கள். ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் பிடித்தவர்கள் ஏதேனும் தீங்கு செய்துவிட்டால், வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் விரக்தி அடைந்துவிடுவார்கள். எனவே அதிக பாசம் வைத்து நம்புவதை தவிர்த்தால், வாழ்க்கையில் இவர்கள் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஆவணி
ஆவணி ஆகஸ்ட் 15 – செப்டம்பர் 15 வரையான காலமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சுய தொழிலில் செய்யவே விரும்புவார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். தான் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்ற எண்ணம் கொண்டவர்கள். எதையும் உடனடியாக செய்து முடிக்க நினைப்பார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் பணக்காரராகலாம். ஏனெனில் இவர்கள் எதையும் நன்கு பலமுறை யோசித்து, நிதானமாக செய்வார்கள். இவர்கள் மிகுந்த சிக்கனமாக இருப்பார்கள் மற்றும் இவர்களுக்கு கடன் வாங்க பிடிக்காது.
புரட்டாசி
செப்டம்பர் 15 – அக்டோபர் 15 வரையான காலம் புரட்டாசி மாதமாகும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தராக வாழப் பிறந்தவர்கள். இவர்களின் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு பலர் பொறாமைப்படுவார்கள். இவர்களை தொழில்ரீதியாக வெற்றிப் பெறுவது என்பது முடியாத காரியம். நன்கு படிப்பார்கள். யாரேனும் தவறு செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். மிகுந்த புத்திசாலி மற்றும் இவர்களுக்கு தன்னுள் இருக்கும் திறமை தெரியாது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பர்.
ஐப்பசி
ஐப்பசி மாதம் அக்டோபர் 15 – நவம்பர் 15 வரையானது. இம்மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இவர்கள் எப்போதும் பெரிய திட்டங்களையே தீட்டுவார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்களுடன் பழக பலர் விரும்புவார்கள். பொறுமைசாலி மற்றும் உழைத்து வாழ வேண்டும் என நினைப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடமாட்டார்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள்.
கார்த்திகை
நவம்பர் 15 – டிசம்பர் 15 வரையான காலம் கார்த்திகை மாதமாகும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பர். இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரமடைந்து பல செய்யக்கூடாத செயல்களை செய்யக்கூடியவர்கள். எனவே இவர்கள் பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது.
மார்கழி
டிசம்பர் 15- ஜனவரி 15 வரையானது தான் மார்கழி மாதம். இம்மாதத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க விரும்புவார்கள். செய்யும் காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள். இதனால் பிற்காலத்தில் சிரமத்தை சந்திப்பார்கள். எதிலும் அவசரப்படுவார்கள். சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.
தை
ஜனவரி 15- பிப்ரவரி 15 வரையான தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். எதிலும் வருமானம் வருமா என்று யோசித்தே செய்வார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி மற்றவர்கள் எதிலும் ஈடுபடக்கூடாது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது. விவசாய மாதத்தில் பிறந்ததால், இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் பெரும் லாபம் கிடைக்கும்.
மாசி
பிப்ரவரி 15 – மார்ச் 15 வரையான மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். இவர்களிடம் யாரும் எந்த ஒரு உண்மையையும் மறைக்க முடியாது. எதை எப்போது செய்தால் நன்மை கிட்டும் என்பதை நன்கு அறிந்து காரியத்தை செய்வார்கள். அனைவருடனும் சகஜமாக பழகுவார்கள். இதனால் இவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பார்கள். இம்மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணம் செய்ய விரும்புவார்கள்.
பங்குனி
பங்குனி மாதம் மார்ச் 15 – ஏப்ரல் 15 வரையானது. இம்மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக மனக்கஷ்டங்களைச் சந்திப்பதால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடியவர்கள். எனவே கவனம் அவசியம். இவர்களுக்கு முன்கோபம் அதிகம் வரும். சிற்பக்கலையில் அதிக ஆர்வம் இருக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் பொய் சொல்வார்கள். தங்கள் இஷ்டப்படியே எப்போதும் நடப்பார்கள்.
http://www.manithan.com/lifestyle/04/132906?ref=rightsidebar-manithan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக